மயிலாடுதுறை, ஜூன் 16 - பெண் வாடிக்கையாளரை தாக்கிய இரு சக்கர வாகன விற்பனை நிறுவன ஊழியரை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை அவையாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் நிவேதா (23).
இவரது கணவர் குமார், பூம்புகார் சாலையில் உள்ள இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் கடனுக்கு வாங்கிய வாகனத்துக்கான பணத்தை செலுத்தவில்லையாம். இந்நிலையில், ஆனந்ததாண்டவபுரம் பகுதியில் நிவேதா இருசக்கர வாகனத்தில் சென்றபோது, இருசக்கர விற்பனை நிறுவ னத்தினரான ஊழியர் சௌந்தர்ராஜன், அவரை வழிமறித்து தாக்கியதுடன், இரு சக்கர வாகனத்தையும் எடுத்துச் சென்றாராம். இதுகுறித்து நிவேதா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், சௌந்தர்ராஜன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் கைது செய்ய வில்லை. இதைக் கண்டித்தும், சௌந்தர்ராஜன் உள்ளிட்ட அந்நிறுவன ஊழியர்கள் இருவரை கைது செய்ய வலியுறுத்தியும், வாகன விற்ப னையகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
கட்சியின் நகரச் செயலாளர் டி.துரைக் கண்ணு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், பி.மாரியப்பன், ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவிச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.ஆர்.விஜய் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சுப்ரியா பேச்சுவார்த்தை நடத்தி, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப் பட்டது.